Saturday, November 26, 2016

கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்

ஆறாம் திணை என முன்னர் ஒரு இணையத் தமிழ் இதழ் இயங்கியது. இந்த இதழில் 2000 ஆம் ஆண்டளவில் கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் அவர்களின் நேர்காணல் http://archives.aaraamthinai.com/6mthinaithoguppu/cinema/dec03interview.asp என்ற இணைய முகவரியில் வெளியாகியிருந்தது. இந்த முகவரி தற்போது செயற்படவில்லை. இந்த நேர்காணல் பக்கத்தை archive.org பரணிட்டிருந்தது. 2009 ஜனவரி 6 ஆம் நாள் பரணிடப்பட்ட இப்பக்கம் அக்காலத்தில் இருந்த TSCII எழுத்துருவில் உள்ளதால் நேரடியாகப் படிக்க முடியாதுள்ளது. அதனை Unicode க்கு மாற்றி இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
=====
வீடு திரைப்படத்தில் சொக்கலிங்க பாகவதர்

[சினிமா விமர்சனம்]
சமீபத்தில் தமிழக அரசால் 'கலைமாமணி' விருதும், குடியிருக்க வீடும் வழங்கி சற்றுத் தாமதமாகக் கெளரவிக்கப்பட்ட நடிகர் கே. ஏ. சொக்கலிங்க பாகவதர். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர். இசை நாடகம் நடத்த வேண்டும் என்று தன்னிடம் வருவோருக்கெல்லாம் நாடகம் நடத்தும் முறை பற்றியும், நாடக இலக்கணம் பற்றியும் விளக்கும் அளவுக்கு அத் துறையில் பெரும் ஆர்வம் கொண்டவர்.
1937 - ஆம் ஆண்டிலேயே 'ரம்பையின் காதல்' படத்தில் நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின், பாலு மகேந்திராவின் 'வீடு', 'சந்தியா ராகம்' படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார். இவருக்குத் தற்போது 90 வயது ஆகிறது. இந்தத் தள்ளாத வயதிலும் கூட யார் வந்து நடிக்க அழைத்தாலும் 'சரி' என்று ஒப்புக் கொண்டு இன்றும் நடித்து வருகிறார்.
இனி அவருடன் ஒரு நேர்முகம்
* உங்களுடைய கலை உலகப் பிரவேசம் எப்படி ஏற்பட்டது?
'' நான் சிறு வயதிலேயே நன்றாகப் பாடுவேன். என் குரல் இனிமையைக் கேட்டு 1921-ல் காளி என். ரத்தினம் அவர்கள் என்னைப் பற்றி அறிந்து என் வீட்டிற்கே வந்து பாடச் சொல்லிக் கேட்டார். என் பாட்டைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்ட அவர், தான் இருக்கும் 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 'யில் சேர்ந்து கொள்ளச் சொல்லி என்னையும் கூப்பிட்டார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாப் போச்சு. என் பெற்றோர்களும் சந்தோஷமாகச் சம்மதித்தார்கள். அன்றைக்கு மறுநாளே திருப்பாப்புலியூர் போய் சேர்ந்தோம். நான் போய் சேர்ந்த அன்று 'சத்தியவான் சாவித்திரி' நாடகம் வைத்திருந்தார்கள். அந்த நாடகத்தில் எமன் தர்பாரில் நான் புண்ணிய புருஷராக வேடம் தரித்துக் 'காக்க வேணும் ராமா' எனும் பாட்டை இனிமையான குரலில் பக்திப் பரவசத்தோடு பாடினேன். அந்தப் பாட்டைக் கேட்டு நாடகம் பார்க்க வந்த ஜனங்கள் யாவரும் கொட்டகையே அதிரும்படி கரகோஷம் செய்தார்கள். அந்தக் கரகோஷத்தைக் கேட்டு நான் ஆனந்தப் பரவசத்தில் மெய் மறந்து போனேன். இதில் காளி என். ரத்தினமும் மிகுந்த களிப்படைந்தார். உடனே கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு ஐந்து ரூபாய் எனக்கு சம்பளம் போடவும் சொன்னார்.''

* ஒரு நாளைக்கு இந்தச் சம்பளமா?
'' எப்படிக் குடுப்பாங்க. ஒரு மாசத்துக்கான சம்பளம் அந்த ஐந்து ரூபாய். அந்தக் காலத்துலு அஞ்சு ரூபாய்க்கு அவ்வளவு மதிப்பு.''

* காளி என். ரத்தினம் தான் அந்த நாடகக் கம்பெனியை நடத்தினாரா ?
'' இல்லை. அவரும் அந்தக் குழுவில் ஒரு நடிகர்தான். எஸ்.எம். சச்சிதானந்தம் பிள்ளை தான் அந்தக் கம்பெனியுடைய முதலாளி.''

* எவ்வளவு காலமாக 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில்' இருந்தீர்கள்?
''திருப்பாப்புலியூர், பாண்டிச்சேரியில் முகாமிட்டுக் கடைசியாகச் சென்னை வந்து சேர்ந்தோம். இங்கு வந்து ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தோம். இதற்குள் நான் கம்பெனியில் சேர்ந்து ஆறு மாத காலமாகிவிட்டது. அதுவரையில் வால பார்ட்டும், நடனப் பயிற்சியும்தான் நான் கற்றுக் கொண்டது. எனக்குப் பெரிய வேஷங்கள் போட்டு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க வேண்டுமென்ற பேரவா. அதற்கு இந்தக் கம்பெனியில் இடமில்லை என்று அறிந்து அந்தக் கம்பெனியை விட்டு ஆறே மாதத்தில் விலகி விட்டேன்.''

* ஒற்றை வாடைத் தியேட்டர் என்பது எங்கே இருந்தது ? பிறகு வாலபார்ட் என்று சொன்னீர்களே அது என்ன ?
''சென்ட்ரலுக்குப் பக்கத்திலுள்ள வால்டாக்ஸ் தியேட்டரைத்தான் அந்தக் காலத்தில் ஒற்றைவாடைத் தியேட்டர் என்பார்கள். வாலபார்ட் என்றால் பிரேயர் என்று அர்த்தம்.''

* அதன் பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
'' நான் விலகி வந்து விட்ட செய்தி கேட்டு 'எலும்பில்லா மானிடன்' எஸ். சாமிநாதன் என்னைக் கூட்டிக் கொண்டு போய் ராணிப்பேட்டையில் தன் குழுவினரோடு சேர்த்துக் கொண்டு நல்ல வேஷங்கள் கொடுத்து நடிக்கச் சொன்னார். பிறகு 1922- ஆல் தஞ்சை தபேலா டி.ஆர். நாராயணசாமி நாயுடு 'மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபை' யில் நடிப்பதற்குத் தேடி வந்து கூப்பிட்டார். நானும் போய்விட்டேன்.''

* உங்கள் நாடக வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?
''தஞ்சாவூரில் நாடகம் முடித்துக் கொண்டு என்னுடைய சொந்த ஊரும், எனது சாதிக்காரர்கள் நிறைந்த ஊருமான கும்பகோணத்துக்கு வந்தோம். நோட்டீஸில் என் பெயரை 'விஸ்திலத் திலகம், சங்கீத களஞ்சியம், மாஸ்டர் கே. ஏ. சொக்கலிங்கம்' என்று விளம்பரம் கொடுத்திருந்தார்கள். எங்கள் கம்பெனிக்கு நல்ல வசூலும், நல்ல பெயரும் கிடைத்தது.''

* உங்கள் நாடக வாழ்க்கையில் உங்களோடு சேர்ந்து நடித்துப் பின்னாளில் பிரபலமானவர்கள் உண்டா?
'' நிறையப்பேரு உண்டு. குறிப்பா எம்.ஜி.ஆர், எம்.ஜி.சக்ரபாணி, எம்.கே. தியாகராஜ பாகவதர், விகடம் எஸ். பக்கிரிசாமி, பி.யு. சின்னப்பா இப்படி நிறைய்ய உண்டு. ''

* உங்களுக்கு பாகவதர் பட்டம் கிடைத்தது எப்போது ? அதை வழங்கியது யார்?
'' 1934 ஆம் ஆண்டு 'பிராட்காஸ்ட் ரிக்கார்டிங் கம்பெனி' யில் சீதா கல்யாணம் செட்டில் ஜனகனாகவும், தனிப்பாடல் ஆறு ரிக்கார்டும் பாடியதற்காக ரிக்காட்டிங் கம்பெனிதான் பாகவதர் பட்டம் கொடுத்தது.''

* நீங்கள் சினிமா உலகிற்கு எப்போது வந்தீர்கள் ?
'' எஸ். சவுந்தரராஜ ஐயங்கார் படத்தில் நடிக்க ஆள் செலக்ஷனுக்கு வந்த போது அவரே என்னைக் கூப்பிட்டு அனுப்பி அவர் எடுத்த 'சம்பூர்ண மகாபாரதம்' படத்தில் நடிக்கச் சொன்னார். நானும் அவர் சொன்னதை ஏற்று ஸ்ரீகிருஷ்ணன் வேஷம் போட்டு நடித்தேன்.

* அப்போது உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்தது?
'' நான் 5000 ருபாய் கேட்டேன். அதற்கு, '500 ரூபாய் தான் பட்ஜெட், நான் அவ்வளவுதான் தருவேன் இஷ்டம்னா நடிங்க' என்று சொல்லி விட்டார். தியாகராஜ பாகவதர், அப்போதெல்லாம் 5000 ரூபாய்தான் வாங்கிக் கொண்டிருந்தார். அதை மனதில் வைத்துக் கொண்டு நானும் கேட்டேன். ஆனால், 500 ரூபாய்தான் வாங்கிக் கொண்டேன்.''

* இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
தொலைக்காட்சித் தொடர்களோடு சேர்த்து ஒரு ஐம்பது இருக்கும். அது இல்லாமல் ஒரு ஆங்கிலப் படத்திலும் கூட மீனவர் தலைவனாக நடித்திருக்கிறேன். அந்தப் படத்தை இத்தாலியிலிருந்து இங்கே வந்து எடுத்தார்கள்.''

* உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்த படம்னு எந்தப் படத்தைக் கூறலாம்?
''என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் 1989 - இல் பாலு மகேந்திரா, இயக்கிய 'வீடு' என்ற திரைப்படத்தைச் சொல்லலாம்.''

* சமீபத்தில் படங்கள் அல்லது தொலைக்காட்சித் தொடர்கள் ஆப்படி ஏதாவது உண்டா?
'மருதநாயகம்' படத்தில் நடிப்பதற்குக் கமல் வந்து பார்த்து விட்டுப்போனார். என்ன விபரம் என்று தெரியவில்லை. வெளிவராமல் நிலுவையில் இருக்கும் 'இஞ்சினியர்' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். சன் டிவியில் தொடராக வந்து கொண்டிருக்கும் 'குடும்பம்' தொடரில் நடித்திருக்கிறேன். இப்போது யார் வந்து கூப்பிட்டாலும் நடிக்கத் தயார்.''

* உங்களுக்கு 90 வயதில் கலைமாமணி விருதும், வீடும் கிடைத்தது பற்றி...
''கலைமாமணி விருது இந்த 90 ஆவது வயதில் எனக்குக் கிடைத்த மகத்தான பரிசு. எனக்குக் கலைஞர் அவர்களுடைய திருக்கரத்தால் பொற் பதக்கமும், விருதும் வழங்கி, குடியிருக்க வீடும் கொடுத்து என்னை வாழ வைத்த அவருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.''

சந்திப்பு : பி. நந்தகுமார்

No comments:

Post a Comment